30 May 2010





மௌனம்...!!!

--------------------

வார்த்தைகள்
வலிக்குமென்று
மனசு சும்மா இருக்கப்
பிரியப்படும் ஒரு பொழுது
மௌனம்.....

வார்த்தைகளை
மிச்சம்பிடிக்கிற
யுத்தியல்ல....இது
உன்னைப்பற்றி
உனக்கே
உணரவைக்கும்
இன்னுமோருபாஷயின்
மொழிபெயர்ப்பு...!!

போதிமரத்தடியில்
புத்தனை
புதுப்பித்ததும்
இந்த மௌனமே

சுமக்கத்தெரிகிரபோது
மௌனம் - ஒரு
சுகமான பயணம்......!

தொட்டதும்
சிணுங்குகிற
சில்லறைகளை விடவும்....
மௌனமாய் கிடக்கிற
காகித நோட்டுகளுக்குத்தான்
கனத்தமரியாதை...!!

பகலெல்லாம்
கத்தியலைகிறது....
காகம்...!!
இதுபெரிய இழவென்று..
கடைசியில்
கல்லெறிகள் விழும்...
மௌனமாய்
காத்திருக்கவிட்டு....
கூவும்
குயிலோசயில்தான்
கொள்ளைப்பிரியம்..!!

வேறுவேலையின்றி
உளறியபடியே
கிடக்கும்...
கடல்..!
கடைசியில்
தாகமெடுக்கையில்....
தண்ணீர்தேடி
எங்கே போய் முட்டினாய்??
கடற்கரையிலா???
மௌனமாய்
கிடக்கிற
ஆறு குளம்
நோக்கித்தானே ஓட்டமெடுத்தாய்

மௌனம்
முற்றுப்புள்ளியல்ல...........
இன்னுமொருதுவக்கத்திர்கான
அஸ்திவாரம்...

எல்லா மௌனமும்
சம்மதத்திற்கான
அடையாளமாய்
ஒப்புக்கொண்டு
தப்புக்கனக்குப்போடாதே...

எப்படியோ....
சுமக்கத்தெரிகிரபோது
மௌனம் - ஒரு
சுகமான பயணம்......!

28 May 2010




வழியனுப்புதல்.....!
--------------------

"அட்மிஷன்வந்தாச்சா??"
என்பதிலிருந்து துவங்கும்

பரீட்சை பற்றிய
வாப்பாவின்
விசாரணை.....!!!

தொலைக்காட்சியிலும்
பத்திரிகையிலுமாய்.....
வீணே
உழன்று திரிகையில்....
எதையாச்சும் படியேன்!!
என்கிற
கண்டிப்புகளில்
ஆயிரம் ஆயிரம்
அக்கறையிருக்கும்!!

பேனா,பென்சில்
ஆளடையாள அட்டை
அட்மிசன்
வரைக்குமாய்
அத்தனையும் எடுக்கச்சொல்லி
எந்நேரமும் எச்சரித்து....
சிலநேரம் எரிச்சல் ஊட்டி...

"நேரத்தோடு தூங்கி
நேரத்துக்கு எழச்சொல்லி"
பரீட்சைக்கு முதல் நாளே
கண்டிப்பாய் உத்தரவிட்டு

"எதற்கும்
ஒன்றுக்கு இரண்டு
பேனாவை எடுத்துவை "-என
எச்சரித்தபிறகும்
பரீட்சைக்கான
அவசரத்துக்கு நடுவில்
காலையில் எழுந்துதான்
எழுந்துதான்
பேனா வேணும் என்பேன்!!!

கடிந்து....
அவசரமாய்
கடைக்கு விரைந்து....
பேனா வாங்கி
எழுதிப்பார்த்து....
இடைவெளியில்
கொண்டு சேர்த்து...
வழியனுப்பிவிட.....
இன்றைக்கு வாப்பா.........
இல்லை!!!!!!

உங்கள்
வழியனுப்புதல் இல்லாத
எனது முதல் பரீட்சை!

எனக்கான
எல்லாபரீட்சைகளும்
இனி இப்படியேதான்
தொடரப்போகிறது
வாப்பா!!!!

பல்கலைக்கழக
இறுதிப்பரீட்சைக்கு
வழியனுப்ப...
இறுதியாய் பஸ் ஹோல்ட் வரை
வந்தது..
இப்போதும்
நினைவில் உண்டு...!!!

வேடிக்கையை பாருங்கள்
பட்டதாரியானபிறகும்
வேலைகொடுக்க பரீட்சை
வைக்கிறார்கள்
இப்போது இருந்திருந்தால்
வேடிக்கையாய்
சிரித்திரிப்பீர்கள்.....

எல்லாம் எடுத்த பிறகும்
பாதி திருப்தியோடுதான்
பரீட்சை தொடரும்
உங்கள் வார்த்தைகள்
மோதுண்டு விழுகின்றன......

சிரமங்களுக்கு நடுவில்
படிக்கவைத்து
பரீட்சைக்கும் வழியனுப்பிவிட்டு
பெறுபேறுகள் வர முன்னமே
வாழ்க்கை முடிந்துபோய்....

எனது பெறுபேறு.....
எனது பட்டமளிப்பு விழா..
எனது வேலை....
எனது வாழ்கை...
என
பின்னரான
எந்த சந்தோசங்களையும்
பகிர்ந்து கொள்ளாமல்...
ஊர் உலகில்..
நம்மைப்போல்
எத்தனை

வாப்பாவும் மகள்களுமோ...!!!!!